பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்
அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.
அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து நிறைவு செய்ய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தலதா மாளிகை, மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், கோட்டபய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி, நாளை 25ஆம் திகதிக்குள் சிறையிலிருக்கும் கைதிகளின் தண்டனைக்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமன்னிப்பு வழங்கவும் அபராதத் தொகையைச் செலுத்தாத சிறைத் தண்டனைக் கைதிகள் அனுபவிக்கும் தண்டனையின் மீதிப் பகுதியை இரத்து செய்யவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து) இருப்புத் தொகையை இரத்து செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு சிறப்பு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு உரிமையுண்டு.
சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது விடுதலைக்கு உரித்துடைய கைதிகளின் பெயர்களை தயாரித்து வருவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.