இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன
.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெரும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமா இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும் அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஒன்றுமையினை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் கூடி கலந்துரையாடி இறுதி முடிவை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுமந்திரனின் கருத்து
இதேவேளை, அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகபற்றற்ற விதத்தில் பேசியதாவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் கடும் அதிருப்தியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் சாதகமாகவே அமைய வாய்ப்புள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகளாவிய நெருக்கடிகள் காரணமாகவே தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகள் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி
சர்வகட்சி மாநாட்டில் தமிழர்களின் தீர்வு விடயம் குறித்து கலந்துரையாடும் பொழுது பெரும்பான்மையின காட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கருத்துக்களை முன்வைக்காததால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமையலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.