அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக
இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது. பணம் ஒதுக்க வேண்டுமானால் கடந்த 06 மாதங்களில் பொருளாதாரத்தை மீட்பதற்கான வேலைத்திட்டம் அழிந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
'வேதனையான முடிவுகளை எடுக்க நேரிடும்'
கொலை செய்யப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக வேதனையான முடிவுகளை எடுக்க நேரிட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அவ்வாறான முடிவுகளை எடுக்கும் போது பொதுமக்களுக்கு பெரியளவில் வேதனையான அனுபவம் ஏற்படும்.
பொருளாதார நெருக்கடியில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு வாழ்க்கை செலவு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தை பெறும் நபர்களே அதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் வறுமை நிலைமை மேலும் மோசமடையும்.வறுமை கோடு மேலும் கீழ் நோக்கி செல்லும். வறியவர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு. அப்படி செய்யவில்லை என்றால், அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவது சிரமம்.
நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி இருக்கும் போது அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, கடந்த காலத்தை போல் ஆடம்பரமாக வாழ்வது சிரமம்.
பொருளாதாரம் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை தமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனவும் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
விடைபெறும் 30,000 அரச ஊழியர்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
“எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அதன்படி டிசம்பர் 31ஆம் திகதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களில் பாதுகாப்புத் துறை, மாநகராட்சி, வாரியங்கள் என ஒவ்வொரு நிறுவன ஊழியர்களும் காணப்படுகின்றனர்.
“இதேவேளை, அரச சேவையை கொண்டு வருவதற்கு பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
“இதன் மூலம் அரச சேவையை கொண்டு வருவதுடன் அரச சேவையை மீள் மதிப்பீடு செய்வதுடன் அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் போன்ற பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எந்த தடையும் இல்லை.
“இதேவேளை, ஓய்வு பெறும் 30,000 பேரின் சம்பளத்தில் 85 வீதத்தை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சுமையை குறைத்து வழங்க சகல வழிகளிலும் செயற்பட்டு வருகிறது.
“இதேவேளை, 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாண அரசாங்க சேவையில் கணக்கீடு செய்யப்படாத சாரதிகள் இன்றி அதிகளவான வாகனங்கள் உள்ளூராட்சி சபைகளில் காணப்படுகிறது” அமைச்சர் தெரிவித்தார்.