இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்குத் தீர்வைக் கொண்டுவர, சர்வதேச நாணய
நிதியம் கடுமையாக உழைத்து வருவதாக, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜியேவா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன் உள்ளடக்கம் பின்வருமாறு,
“2023ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம்.
“கடந்த வாரம் நான் சீனா சென்றிருந்தேன். அங்கே கரோனா தொற்றே இல்லாத பபுள் ஜோனுக்கு சென்றேன். ஆனால் பயணத் தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் தொற்று பரவலைத் தடுக்க முடியாது.
“அடுத்த 2 மாதங்கள் சீனாவுக்கு மிகவும் கடினமான காலம். சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.
“ஆனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்க்கும் சூழலே இருக்கிறது. காரணம் அங்கு தொழிலாளர் சக்தி இன்னும் வலுவாகவே இருக்கிறது அவர் கூறினார்.
“முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் சர்வதேச நிதியம் 2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பில் உக்ரேன் போர், உலகம் முழுவதும் நிலவும் பணவீக்க அழுத்தங்கள், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதால் சர்வதேச அளவில் மந்தநிலை ஏற்படும் என்றே கூறியிருந்தது.
“சீனாவின் நெருக்கடி எதனால்? 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
“ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானது.
“அதன்பின்னர் சீனா தனது பூஜ்ஜியம் கொவிட் கொள்கையை சற்று தளர்த்த ஆரம்பித்தது. ஜனவரி 8ஆம் திகதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை இரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.
“கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது புத்தாண்டு உரையில் சீனா புதிய அத்தியாயத்தில் அடிவைக்கும் இவ்வேளையில் மக்களின் ஒற்றுமையும், உழைப்பும் தேவை என்று கூறியிருந்தார்.
“40 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2022இல் சராசரி அல்லது சராசரிக்கும் குறைவான நிலையை எட்டவிருக்கிறது என்று பல்வேறு கணிப்புகளும் கூறுவதால் சீனா தளர்வுகளை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“இதுவரை, இந்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. செட் (Chad), எத்தியோப்பியா, சாம்பியா, கானா, லெபனான், சாம்பியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அதற்கான தீர்வுகளைத் ஆராய்ந்து வருவதை அந்த நாட்டு மக்களுக்குச் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இருப்பினும், தற்போது இது உலகளாவிய பரவல் இல்லை. ஆனால், சுமார் 25% வளரும் நாடுகள் இவ்வாறு கடன் நெருக்கடியை நோக்கி நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகளின் பட்டியல் இப்படியே வளர்ந்தால், அது உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது.
“எனவேதான் சர்வதேச நாணய நிதியம் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையாக உழைத்து வருகிறது. அதற்காக, பரிஸ் கிளப் போன்ற பாரம்பரிய கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற பாரம்பரியமற்ற கடன் வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.