வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (04) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இரா.சம்பந்தனின் உடல் நலம் தொடர்பில் ஆராய்வதற்காக, அவரது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போதே, இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த விஜயத்தின் போது, வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எடுத்துரைத்துள்ளார்.
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் மஹிந்தவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில், தமது கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்வார்கள் என மஹிந்த இதன்போது கூறியுள்ளார்.
அதன்பின்னர், இந்த கலந்துரையாடல்களில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் ஆராய்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.