தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம்
நேற்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ சபை கூட்டம், நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுதொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.