உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய்
செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆய்வு உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிவடைந்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததும் அச்சடிக்கும் பணி தொடங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான ஏனைய ஆவணங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இக்கடிதத்தில் கோரியுள்ளார்.
தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் தான் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரச அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டையும் அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு சில அரச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆதரவை, ஜனாதிபதி தலையிட்டு வழங்க வேண்டும் என நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.