தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விரைவில் இரு நாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் இந்திய மீனவ வளத்துறை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கலாசார மையம் திறப்பு விழா முடிந்து, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழகப் பிரிவுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பினர்.
இதன்போது செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அமைச்சர் முருகன், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம், இலங்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த மையம் யாழ்பாண மக்களின் நலனுக்காக முற்றிலும் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது என்று முருகன் கூறினார்.
2015 மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.