உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால் அதற்கான பணத்தை
வழங்கத் தயார் என பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு பணப்பற்றாக்குறை என்ற பிரச்சினையை அரசாங்கம் முன்வைத்து வருவதாகவும், தேர்தலுக்கான பணத்தை ஒதுக்குவதற்கான திட்டங்கள் இந்த வாரத்தில் தயாரிக்கப்படும் எனவும் பஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் உரிமைகளை தடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இந்த வாரத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணலால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
திட்டமிட்டபடி திகதியில் தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெறாததால், குறித்த வழக்கை 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
மனுதாரர் மற்றும் இடைமனுதாரரால் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாததால், இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.