தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்லவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையைச் சரி பார்க்கும் பெர்ஃபெக்ட் ஷெக் என்ற இணையத்தனம், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த புகைப்படம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, அவரின் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றே மாற்றியமைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Fact Crescendo என்ற மற்றுமொரு இணையத்தளமும், இந்தப் புகைப்படம் தொடர்பான உண்மைத்தன்மையை உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்திருள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு,
“விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். இதனை வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.
சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, பழ.நெடுமாறன் தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் 2009ம் ஆண்டு முதலாகவே, இவ்வாறுதான் கூறி வந்தாலும், இந்த முறை அவரது பேச்சை பல்வேறு தரப்பும் விவாதித்து வருகின்றனர்.
இதையடுத்து, பலரும் மேற்கண்ட வகையில், பிரபாகரன் சமீபத்திய தோற்றம், என்று கூறி தகவல் பகிர தொடங்கியுள்ளனர். உண்மையில், இது ஒரு எடிட் செய்யப்பட்ட படமாகும்.
இந்த படத்தின் மேலே ஒரு லோகோ இருப்பதை வைத்து, நாம் தகவல் தேடினோம். அப்போது, Vajra Media என்ற ஒரு ட்விட்டர் பக்கம், இந்த படத்தை முதலில் தயாரித்து பகிர்ந்திருப்பதைக் கண்டோம்.
இந்த பதிவின் கமெண்ட் பகுதியில், வாசகர் ஒருவர் இது போலிதானே என்று கேட்க, அதற்கு Vajra Media ஆமாம் என்று குறிப்பிட்டு பதில் அளித்திருப்பதைக் கண்டோம்.
இதன்படி, மேற்கண்ட ஃபோட்டோஷாப் படத்தை தயாரித்து முதலில் பகிர்ந்த நபரே, அதனை ஒப்புக் கொண்டுவிட்டதால், இது உண்மையல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, உண்மையான புகைப்படமும், போலியான புகைப்படமும் ஒப்பீடு செய்து, கீழே தரப்பட்டுள்ளது. பிரபாகரனின் பழைய படத்தை எடுத்து, தாடி மீசை சேர்த்து எடிட் செய்துள்ளதை, தெளிவாகக் காணலாம்.
இவ்விரு படங்களிலும் ஜன்னல் நிலையில் உள்ள கரும்புள்ளி, பிரபாகரன் நெற்றியில் உள்ள தலைமுடி, அவரது நிழல், கண் பார்வை அனைத்தும் ஒத்துப் போவதைக் காணலாம்.
இதனை எடுத்தே, Face App முறையில் இவ்வாறு போலியாக தயாரித்துள்ளனர் என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, நாம் அந்த ஆப் பயன்படுத்தி, இதே புகைப்படத்தை கீழ்க்கண்ட முறையில் தயாரித்து பார்த்தோம். அவற்றில் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, யார் வேண்டுமானாலும், இப்படி புகைப்படங்களை வைத்து, போலியாக தயாரிக்கலாம் என்று தெளிவாகிறது.