சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மூலம் இலங்கைக்கு பல கதவுகள் திறக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர்
தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"அடுத்த முடிவாக இலங்கையுடனான இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று, ஐ.எம்.எஃப் நிதி ஓர் அறிவிப்பை வெளியிடும்... அதன் பிறகு, முதல் தவணை வெளியிடப்படும். முதல் கட்டத்தில் IMFஇல் இருந்து சுமார் $300-350 மில்லியன் பெறுவோம் என்று நினைக்கிறேன்."
"IMFஇன் பணம் வேறு எங்கும் செல்ல முடியாது. அது நேரடியாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்புகளுக்கு செல்கிறது. அதே நேரத்தில் அவர்களின் கையிருப்பு அதிகரிக்கும் போது நமது கடன் வகைப்பாடு அதிகரிக்கிறது. அங்கிருந்து, நாம் மேலும் கதவுகளைத் திறக்கலாம்...
"மக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். ஆனால், எதிர்வுகூருவது கடினம்... பொதுவாக டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு அருகில் வரும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் தொடர்பான உடன்படிக்கை கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சீனாவின் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நீட்டிக்கப்பட்ட கடன் தொகைக்கான முக்கிய தடை நீங்கும் என்றும் புளூம்பேர்க் வர்த்தக இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.