நெல் விவசாயிகளுக்கான இயற்கை உரங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகையைத் தேயிலை மற்றும் மரக்கறி
தோட்டங்களுக்கும் வழங்குவதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
சேதன மற்றும் கொம்போஸ்ட் உரங்களைப் பெற்றுக்கொள்ள நெல் விவசாயிகள் மறுத்ததை அடுத்தே, அரசாங்கம் அவர்களக்கு இந்தச் சலுகையை வழங்கி வந்தது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சேதனப் பசளை மற்றும் கொம்போஸ்ட் போன்றன உரிய தரத்தில் அமையப்பெறாமையால் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு, விவசாயிகள் மறுப்புத் தெரிவித்தனர் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சில் கடந்த பலமுறை இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது, விவசாயிகள் இது குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே, நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அந்த உரம் தேவையில்லையெனில், அதனை தேயிலை மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கைகளுக்கு வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022 – 2023 பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளைக்கு, அரசாங்கத்தினால் 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஒரு ஹெக்டெயார் நெல் விவசாய நிலத்துக்கென்று 20,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இம்முறை பெரும்போகத்துக்கு 10,000 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படுகிறது.