வன்னி வாழ் இந்துக்களால் பல வருடங்களாக வழிபடப்பட்ட பாறையை இடித்துத் தள்ளுவதற்கு அரசாங்கம் அனுமதி
வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகின்றது.
வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் பாறை ஒன்றை வெட்ட வெளிநபர் ஒருவருக்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பாறையில் இருந்து கருங்கற்களை குவாரி எடுப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே விநாயகப் பெருமானை வழிபட்டு வருவதாக மாகாண செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்குப் பிறகு, கிராம மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாறையின் உச்சியில் தமது அறுவடைகளை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் இணைந்தனர்.
அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே தாங்கள் வழிபட்டு வந்த கல் தூண் தற்போது மறைந்து விட்டதாகவும் அதனையடுத்து அந்த இடத்தில் சமீபத்தில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபட்டு வருவதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பாறை வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிராந்திய செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களம் போன்றன, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.