நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ´ஹரக் கட்டா´ மற்றும் சலிந்து மல்ஷிக என்ற ´குடு சலிந்து´ தொடர்பில் கோட்டை
நீதவான் திலின கமகே இன்று (29) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள இரு சந்தேக நபர்களும் தடுப்புக்காவலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் காவலில் அல்லது விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் காவலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மடகஸ்கரில் இருந்து ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகியோர் நாடு கடத்தப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்களாவர்.
சந்தேகநபர்கள் இருவரினதும் பாதுகாப்பது தொடர்பில் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முந்தைய நாள் உத்தரவின்படி, அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரையும் வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தால், கை கால்களை விலங்கிடுமாறும், மாகந்துரே மதுஷ், கொஸ்கொட தாரக மற்றும் டின்கிரி பிரியந்த ஆகியோர் உயிரிழந்த முறை குறித்தும் சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
தேசபந்து தென்னகோனின் குழுக்கள் அவர்களைக் கொல்லப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொஸ்கொட தாரக கொல்லப்பட்ட தினத்திலும் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்த சட்டத்தரணி குழு, சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றில் மேலும் கோரியுள்ளது.