1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாநோன்புப் போராட்டம்

பழரசம் வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக நேற்று (16) காலை 9 மணி அளவில் இப்போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றநிலையில் 3.30 மணி அளவில் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாநோன்பு முடித்து வைக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி. விக்னேஸ்வரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அகில இலங்கை சைவ மகா சபை, தமிழ்ச் சைவப் பேரவை மற்றும் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரிசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உண்ணா நோன்புப் போராட்டம் இடம்பெற்றது.

அழிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

மட்டு. மயிலத்தனைமடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி