யுனெஸ்கோ அமைப்பின் மூலம் 1970 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி,
ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமைய, தற்போது காணப்படுகின்ற ஏதேனும் அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையுண்டு.
அதற்கமைய, காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. நெதர்லாந்திடமிருக்கின்ற அவ்வாறான 06 தொல்பொருட்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கருத்திட்டத்திற்கமைய, குறித்த தொல்பொருட்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது.
அதற்கமைய, அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்காகவும், தற்போது பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற இலங்கைக்குரிய தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காகவும் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.