நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதிபதி ஒருவரை இனவாத ரீதியில் கண்டித்து நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதை
தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.
குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி விகாரை தொடர்பான வழக்கில் தமிழ் நீதிபதி ஒருவர் தலையிடுவார் எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயற்சிப்பதாக தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவுடன் சரத் வீரசேகர எம்.பிக்கு கருத்து வேறுபாடு, கடந்த ஜூலை நான்காம் திகதி ஏற்பட்டது. குருந்தூர்மலை விவகார வழக்கு அன்றைய தினம் இடம்பெற்ற போது இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சரத் வீரசேகர எம்.பி கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை நீதவான் தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்தே, நீதவான் தொடர்பான இனவாத கருத்து ஒன்றை மேற்படி எம்பி வெளியிட்டுள்ளார்.