இந்த வருடம் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மேற்கத்திய இசை பாடம் தொடர்பான கேட்கும் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட நடைமுறைப் பரீட்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இந்த வருடமும் அதே முறையிலேயே பரீட்சைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் தபால் மூலம் விநியோகிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடைமுறைப் பரீட்சைகளில் சிக்கல் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கலாம் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.