நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளை கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழு
உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளன.
14 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயற்குழுவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 9 எம்.பிக்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். ஏனைய ஐவரும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆவர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், தான் அக்குழுவில் இருந்து விலகி விட்டதாக கூறினார்.
பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளை கண்டறியும் இந்த செயற்குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களே பதவி வகிக்கிறார்.
அவரை இந்தப் பதவியில் அமர்த்தியமை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் சபாநாயகரிடம் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது