வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும்
இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 18ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அந்த பகுதிகளின் எம்.பி.க்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கைப் பாதிக்கும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பும் இணக்கம் காணக்கூடிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தச் சந்திப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் அரசியல் கைதிகள், வடக்கில் காணாமல் போனோர் விவகாரம், வடக்கின் காணிப்பிரச்சினை ஆகியன இங்கு விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, மருந்துகள் கொள்வனவு மற்றும் பால் கைத்தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி அல்லது 21ஆம் திகதி இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து, கடன் மறுசீரமைப்பு செயல்முறை உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவாதிக்க உள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இலங்கை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.