வலதுசாரி தீவிரவாதத்திற்குள் செல்லாமல் மூன்றாவது பரிமாணத்தில், அரசியலில் மூன்றாவது பாதையில், அதாவது புதிய பாதையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து அதிகாரத்தை பிரயோகிக்கும் நோக்கத்தில் மக்கள் செயற்படுகின்றனர் என்பதை முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்துகிறது.
"நாம் சிறிய தவறு ஒன்றை செய்தால் அதை வைத்து எம்மை சிக்க வைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் பல காலங்களுக்கு முன்னாலேயே 'மன்னிக்கவும், நாங்கள் அந்த வலைக்குள் சிக்க மாட்டோம்' என்று தெரிவித்து விட்டோம். நாம் மக்களை நிர்வகிக்கின்றோம். தேர்தலுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்காக மக்களுடன் முன் வருகிறோம். பாராளுமன்றத்துக்குள் போராட்டங்களை நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குனரட்டினம் தெரிவித்துள்ளார்.
'மாளிகைகளை கதிகலங்க செய்த போராட்டங்கள்' என்ற தொனிப் பொருளிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இந்த நூல் பக்க சார்பானது. மக்களுக்கானது. அதேபோன்று போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு சார்பானது" என்றார்.
"கடந்தாண்டு இடம்பெற்ற போராட்டத்தின் பங்காளர்களாக நாமும் இருந்தோம். பல்வேறு கட்சிகள் அரசியல் குழுக்கள் நபர்களின் ஒன்று திரட்டல்கள் தனிமனித பங்களிப்பு என மாபெரும் மக்கள் கூட்டம் கலந்து கொண்ட போராட்டமாகவே அது காணப்பட்டது.
"இந்தப் போராட்டத்தின் போது தனிப்பட்ட ரீதியில் காணப்பட்ட பல்வேறு சவால்கள் எச்சரிக்கைகள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றையெல்லாம் மறந்து பாரிய அர்ப்பணிப்புடன் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர் தியாகங்களை செய்தவர்களும் இருந்தனர். அவ்வாறானவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதேபோன்று போராட்டங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது, எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன? அதற்காக நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான விளக்கங்களும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று குமார் குணரட்ணம் மேலும் தெரிவித்தார்.