எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரிமா உள்ளிட்ட நிறுவனங்கள் பணம் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கோதுமை
மாவின் விலை குறைக்கப்படாமல் உள்ளது என்று, தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கோதுமை மாவின் விலையை அரசாங்கம் ஏன் குறைக்கவில்லை. அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (19) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பகங்கள் (பேக்கரிகள்) காணப்படுகின்றன.இவற்றில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில் புரிகிறார்கள்.
பெருந்தோட்ட மக்கள் உட்பட பெரும்பாலானவர்கள் மாவிலான உணவு பொருட்களை பிரதான உணவாக உட்கொள்கிறார்கள்.ஆகவே நாட்டின் பிரதான உணவு பொருள் மூலமாக கோதுமை மா காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் கோதுமை மா இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி 2023.06.14 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரும் இறக்குமதி தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் கோதுமை இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பிறீமா,செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவ்விரு நிறுவனங்களும் கோதுமை விதை இறக்குமதி செய்து அவற்றை மாவாக்கி,பின்னர் விநியோகிக்கின்றன.
தற்போதைய விலைக்கு அமைய சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கோதுமை விதைகளை இறக்குமதி செய்யும் பிரதான இரு நிறுவனங்களும் ஒருகிலோகிராம் கோதுமை விதைக்கு மூன்று ரூபா வரி செலுத்துகிறது.
உலக சந்தையில் தற்போது கோதுமை மா மற்றும் கோதுமை வித்து ஆகியவற்றின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. துருக்கி நாட்டில் இருந்து கோதுமை மா இறக்குமி செய்தால் ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 110 ரூபாவாக நிர்ணயிக்கலாம்.
உலக சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு மெற்றிக்தொன் கோதுமை மாவின் விலை 550 டொலராக காணப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு மெற்றிக்தொன் கோதுமை மாவின் விலை 355 டொலராக காணப்படுகிறது.மறுபுறம் கோதுமை கடந்த ஜனவரி மாதம் 310 டொலராக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் கோதுமையின் விலை தற்போது 228 டொலராக குறைவடைந்துள்ளது.
உலக சந்தையில் கோதுமை வித்தின் விலை குறைப்பு, டொலரின் பெறுமதி வீழ்ச்சி ,ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளால் கோதுமை வித்தினை இறக்குமதி செய்யும் இவ்விரு நிறுவனங்களும் அதிக இலாபம் அடைகின்றன.இந்த நிறுவனங்கள் செலுத்தும் இறக்குமதி வரிகளுக்கும் தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பத்திரம் இல்லாத தரப்பினர் கோதுமை மா இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்விரு நிறுவனங்களும் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை செலுத்துகிறது.
இது முறையற்றதாகும்.கோதுமை மா விலைக்குறைப்பின் நிவாரணத்தை இந்த நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்கவில்லை.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.