ஜப்பானில் தொழில் நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக, இலங்கை இளைஞர் - யுவதிகளை கூடுதலாக இணைத்துக் கொள்ளுவதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார ஜப்பானின் IRO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுகா கட்சுகாய் (Suga Katsukai) அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பான IRO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுகா கட்சுகாய் (Suga Katsukai) உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இன்று (21) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்து அமைச்சரைச் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தூதுக்குழுவினர் அதற்கு சாதகமான பதிலை அளித்ததுடன், இலங்கையர்களின் தொழில் நுட்ப ஆற்றல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளை ஜப்பானியர்கள் மிக உயர்வாக பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
ஜப்பானின் IRO மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழில் நுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டது.
இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு.ஏ.ஏ.எம்.ஹில்மி, பொது முகாமையாளர் திரு.டி.டி.பி.சேனநாயக்க, பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) திரு.செனரத் யாப்பா மற்றும் IRO வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்லத் தயாராகவுள்ள தொழிலாளர் குழுவினரும் கலந்துகொண்டனர்.