1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் -

200 விழா, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் நேற்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

அமைச்சரின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என முதல்வரிடம் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், இவ்விவகாரம் சம்பந்தமாக இலங்கை அமைச்சரவையிலும் பேசவுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

மலையக கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக தமிழக அரசிடம் 4 கோரிக்கைகளை முன்வைத்த ஜீவன் தொண்டமான், மலையக மாணவர்களுக்கு தமிழகத்திலும் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான புலமைப்பரிசில் திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்களின் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய – வழங்கி வரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மலையகம் - 200 விழா அரச அனுசரணையுடன் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ளமை பற்றியும் தமிழக முதல்வருக்கு, ஜீவன் தொண்டமான் தெளிவு படுத்தினார்.

மேலும், கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதையும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்தும் தி.மு.க அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி