விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு
பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பொலிஸ் பிரிவில் நேற்று (16) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு உளவாளி ஒருவருக்கு 38,000 ரூபாவுக்கு ஊக்க மருந்து ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்யச் சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த நிறுவனம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவரக அதிகாரிகள் இணைந்து பொரளை பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தி மற்றுமொருவரை கைது செய்துள்ளனர்.
அவர் மேலதிக விசாரணைக்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் ஆண்மைக்குறைவு, புரோஸ்டேட், சிறுநீரகம் மற்றும் விரைகளில் மாற்றங்கள் போன்ற நோய்களை ஏற்படுத்துவதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேக நபர் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் அவர் இன்று (17) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.