நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும்
மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2.294 கிலோ கிராம் கொக்கேய்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, போதைப்பொருள் பெறுவதற்காக விடுதிக்கு காரில் வந்த நபர் ஒருவரும் 7 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த போதைப்பொருட்களை வாங்க வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 28 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.