உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்ற வாளிகளுக்கு கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அவர்களில்
ஒருவர் நாட்டை விட்டு விரட்டப்பட்டார் என்பதுடன், இன் னுமொருவர் பணம் கேட்டு யாசகம் செய்கின்றார் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சுகாதாரத்துறை விடயத்தில் நான் சுகாதார அமைச்சரை நோக்கி விரல் நீட்டப் போவதில்லை. ஆட்சியாளர்களே இவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதி செய்யவில்லை.
நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள் தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி என்று இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனை வரும் ஒரே படகில் போகின்றவர்களே.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் மீண்டும் செல்வதென்றால்,இவ்வாறான குற்றச் செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றேன். வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்ய வேண்டாம். ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியாளரே பொறுப்பு கூற வேண்டும்.
இதேவேளை, சனல் 4 தொடர்பில் கூறப்படுகின்றது. அதனை நான் 50 வீதமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ராஜபக்ஷக்கள் யுத்தம் செய்ததால் அவர்களுக்கு எதிராக இவ்வாறு செய்வதாகவும் இருக்கலாம். அல்லது அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சனல் 4 அவசியமில்லை. இங்கே நடந்தவற்றை நாம் அறிவோம். யார் இதன் பிரதான சூத்திரதாரி, அப்போதிருந்த அரச தலைவர் நாட்டில் இருந்து வெளியில் சென்றிருந்தார். அடுத்த விமானத்தில் திரும்பி வாராமல் இருந்தார்.
எவ்வாறாயினும் மேலே கடவுள் இருக்கின்றார். அவர் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒருவர்தான் 1 கோத்தாபய, அவரை நாட்டை விட்டு மக்களே விரட்டினர்.
அதேபோன்று வீதியில் யாசகம் செய்து பணம் சேகரிப்பவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் என்றார்.