இலங்கையில் நான்கில் ஒரு மரணங்கள் வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப்
பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களாக பதிவாகியுள்ளதாக என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இலங்கையில் ஆண்டுக்கு 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் கால் பகுதியினர், சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர். தற்போது, இலங்கை பொலிஸின் போக்குவரத்து தலைமையகத்தின் புள்ளி விவரப்படி , 2023 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை 1,427 வீதி விபத்துகளில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏற்படுகின்றன. இந்த காலப்பகுதியில் 612 மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். எமக்கு விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். உலக சுகாதார அமைச்சு 2030 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக விபத்துக்களை குறைக்க எதிர்ப்பார்த்துள்ளது. "
இதேவேளை, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளை பயன்படுத்திய பஸ் சாரதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 94 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.