இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி
தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை ஒக்டோபர் 18ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பகடிவதை தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் பகடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
076 54 53 454 என்ற தொலைபேசி எண்ணுக்கு நீங்கள் WhatsApp செய்தி, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை அனுப்பலாம்.
1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பணி நேரத்தில் தாதியர்கள் அலைபேசி பாவிக்கத் தடை
வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளரின் உத்தரவின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிகள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களும் தமது பணி நேரத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமி அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள தாதியின் கவனக்குறைவால் கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த தாதியருக்கு எதிராக சாட்சியமளித்த பல நோயாளிகள், தாதி தனது கையடக்கத் தொலைபேசியைக் கையாள்வதற்கே நாளின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்வதாகவும், நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முதற்கட்டமாக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் மற்ற ஊழியர்கள், தாதியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடை செய்ய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.