1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்வேறு படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) அமைப்பினை

சேர்ந்த பலர், இன்றும் சுகந்திரமாக உள்ளனர் என்று வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், அவ்வாறான படைப்பிரிவைச் சேர்ந்தவர்களால், கிழக்கில் தமக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று குறிப்பிட்டார்.
கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்நிலையில் அவர் நேற்று (22) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது உரையின் முழு விவரம் பின்வருமாறு,
“கிழக்கின் அவமானமான பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர். இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
“அத்துடன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்களுக்கான நடவடிக்கை என்ன? அவற்றினை துரிதப்படுத்த வேண்டும்.
“பல கொலைகளுடன் சம்பந்தப்பட்ட திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) அமைப்பினை சேர்ந்த பலர், இன்றும் சுகந்திரமாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்றது? அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லையா? எமக்கும் கிழக்கில் இவர்களினால் அச்சுறுத்தல் எழலாம்.
“மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கான தீர்வினை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.
“அரசாங்கமானது, இனங்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தி, இன முறுகல் நிலைக்கு வித்திடாமல் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.
“அத்துடன், திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தாக்கப்பட்டதற்கு பின்னால் இலங்கை இராணுவப் பிரிவினரின் திட்டமிட்ட செயல் காணப்படுவதாக சந்தேகம் எழுகிறது. அவர் வேறொரு பாதையில் செல்வதாக இருந்தது. பின்பு பாதை மாற்றப்பட்டு புதிய பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அது, இராணுவப் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. இதிலிருந்தே எமக்கு சந்தேகம் வருகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இவர்களே காரணம் என்று.
“இலண்டன் பல்கலைக்கழகம் UNIVERSITY OF LONDONஇனது சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுதப்படுகின்றதா என்பது தொடர்பான கற்கைநெறிக்கு கடந்த ஐந்து நாட்களாக இலண்டன் சென்றிருந்தேன். இதன் நோக்கமானது இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் இக்கற்கை நெறிகளானது இருந்தது.
“அதனடிப்படையில் எமது நாட்டிலும் பல சட்டங்கள் நடைமுறைப்படுதப்படாமல் காணப்படுகின்றன. அவற்றினை அரசு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி