தமிழர்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.
சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை, நானும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசனும் அவசரமாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக நேற்றைய தினம் (24) எமக்கான நேரம் தரப்பட்டது.
"இச்சந்திப்பின் முக்கிய காரணம், மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புகள், "பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது.
"எனிலும். இந்தக் காணிகளானவை மகாவலி அதிகார சபைக்கு உட்பட்டது எனவும் ஆளுநரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு நேரடியாக கெபினட் அமைச்சருக்குள் வருவதால் இப்பிரச்சனை சம்பந்தமாக ஆளுனரால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியாது எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டது.
"இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் கெபினட் அமைச்சர் அல்லது ஜனாதிபதியினை நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
"அத்தோடு, திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாகவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.