அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் பிரவேசித்து T56 துப்பாக்கியால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மூன்று நாட்களாக தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் இன்று (15) அதிகாலை அவிசாவளை பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர்.
சந்தேக நபரை பொலிசார், அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியம்கம ஏத்பந்திய வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனது கைகளில் இருந்த கைவிலங்கைப் பயன்படுத்தி கொல்ல முயற்சித்துள்ளார்.
பின்னர், பொலிஸார் அதை தடுக்க முயன்றனர், இதில் சந்தேக நபர் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்தே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.