வர்த்தகர் ஒருவருக்கு கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி மாலை, குறித்த நபர் கப்பம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக முல்லேரிய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அழைப்பை விடுத்த நபர் நேற்று (24) மாலை தெல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பம் கோரப்பட்ட தொலைபேசியின் சிம் கார்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அங்கொட, தெல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேகநபர் வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கப்பம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான கப்பம் கோரி கொலை மிரட்டல் விடுக்கப்படும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், அவ்வாறான சந்தேக நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸாரால் முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.