மருந்து விநியோகத்திற்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்காக 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்கு மருந்து விநியோகத்திற்கான மேலதிக ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவைக்கு மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் இன்று (27) நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள இரத்த மாற்று நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.