நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவை அவமதிக்கும் வகையில், உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க
அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பியதால் இன்று (08) காலை நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, சபையில் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தினர்.
இன்றைய அமர்வின் போது, ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்பில் ரோஹினி குமாரி எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகளுக்கு பல்வேறு வகையில் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் இது விடயத்தில் ரோஹினி குமாரி எம்.பி திருப்தியடையவில்லை என்றும் அவரை திருப்திபடுத்தும் விதம் தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பதில், பெரும் அவமதிப்பை ஏற்படுத்துவதாக, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நலின் பண்டார மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் உரக்கத் தெரிவித்தனர்.
“ரோகினி குமாரி எம்.பிக்கு தவறு நேர்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத வார்த்தைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகர் வந்ததும் ஒலி நாடாவைக் கையளித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். நாட்டில் உள்ள அனைவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். எனவே இதனை அசிங்கப்படுத்தாதீர்கள்” என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.
"வாபஸ் பெறவேண்டிய வார்த்தைகள் தொடர்பில் அவருக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அவர் இவ்வாறான அவமான வார்த்தைகளை நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்தியுள்ளார்” என்று லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்தார்.