கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் பொரலுகந்த உள்ளுராட்சி சபையின் அனுமதியின்றி புதிதாக
கட்டப்பட்ட விகாரையின் மத அனுஷ்டானப் பணிகள், அப்பிரதேச தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 06ஆம் மைல்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொரலுகந்த விகாரையின் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரலுகந்த விகாரையில் புத்தர் சிலைகளை வைத்து பௌத்த பிக்குகள் சமய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதிலும், ஒரு சில பாமர மக்களே இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
பொதமக்களின் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, திருகோணமலை - பொரலுகந்த விகாரையின் நிர்மாணப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனை எதிர்த்து திருகோணமலை சாசன ரக்ஷக மன்றம் மற்றும் கோகன்னாபுர பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பொல்ஹெங்கொட உபரதன தேரரும் மற்றுமொரு தேரரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குள் நுழைந்து, ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் விளக்கமளித்திருந்த ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்ளுராட்சி சபையின் அனுமதியின்றிய நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய திம்பிரிவெவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் வடக்கு கிழக்குக்குப் பொறுப்பான சங்கநாயக்கத் தேரருமான பொல்ஹெங்கொட உபரதன நாயக்க தேரர், உள்ளூராட்சி சபையின் தடைகளை மீறி பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
"தயவுசெய்து சட்டத்தை கவனமாகப் படியுங்கள். இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதத் தலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்குக்குப் பிறகு அந்த மத வழிபாட்டுத் தலங்களை நாம் விரும்பியபடி கட்ட வேண்டும். அர்ச்சகரின் விருப்பப்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளின் விருப்பத்திற்கேற்ப விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இவை இரண்டையும் உருவாக்க கவர்னரிடம் சென்று அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. அனுமதி பெற வரப்போவதுமில்லை. எங்களுக்கு உங்கள் அனுமதி தேவையில்லை. நாங்கள் எங்கள் விகாரையை நிர்மாணிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில், பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களில் புதிய பௌத்த விகாரைகளைக் கட்டி உள்ளூர் மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக, தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு வருவதாக, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் விளக்கமளிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.