இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது எனத் தெரிவித்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை (ஐ.சி.சி)
, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் சபை அண்மைய சில வருடங்களாக பெரும் அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதனால்தான் இலங்கைக் கிரிக்கெட் அணி படு பாதாளத்துள் விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடுகள் உள்ளன என்பதை, முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன மற்றும் லசித் மலிங்க ஆகியோர் தாம் விளையாடிய காலப்பகுதியில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனால் அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளும் நேர்ந்தன. இந்நிலையில், தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, இலங்கைக் கிரிக் கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது என்பதை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் சாடி வந்த அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் விவகாரம் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் வரை சென்றிருந்தது.
இவற்றை அவதானித்து வந்த ஐ.சி.சி., தற்போது தனது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட்டின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. நேற்றுக் கூடிக் கலந்தாலோசித்தது.
அதன்படி, ஐ.சி.சியின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கைக் கிரிக்கெட், தமது கடமைகளைக் கடுமையாக மீறுகிறது எக ஐ.சி.சி. தீர்மானித்தது.
இதையடுத்து, இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியும் உள்ளது.
அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் எனவும் ஐ.சி.சி. வலியுறுத்தியுள்ளது.