இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்காக,
அச்சபையின் தலைவல்கள் அனைவரும், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றச் செயற்குழு (கோப் குழு) முன் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் 2 மணிக்கு, குறித்த குழுவின் முன் ஆஜராகுமாறு, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஊழல் மோசடிகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை கோப் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நேற்று (10) தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, விளையாட்டு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதிலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்கள் அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.