இலங்கைக்கு எதிரான சர்வதேச கிரிக்கட் தடை தற்செயலானதல்ல எனவும், விளையாட்டு அமைச்சின் அதிகாரிகளது
அலட்சியத்தால் இது நடந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்த போது, இலங்கை கிரிக்கெட்டுக்கு தேவையற்ற அழுத்தங்களைச் செலுத்தினால் கிரிக்கெட் தடை விதிக்கப்படும் என எச்சரித்ததாக கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் சோகமான நிலை. இது திடீரென்று ஏற்பட்ட நிலை அல்ல. இது தொடர்பாக, 4 முதல் 5 மாதங்களாக பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தும், நல்ல பதில் கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் உஸ்மான் இலங்கை வந்த போது ஜனாதிபதியை கூட சந்தித்து இந்த நிலைமையை விளக்கினார்.
“தற்போது இந்த நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் இன்று இலங்கையின் நிலைமையை முழு உலகமும் அறிந்து கொண்டுள்ளது. இது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் மிக மோசமான நிலைக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலைமையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.