“நான் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்வேன். ஜனாதிபதி தொடர்பில் முழு நம்பிக்கை இருந்தாலும் ஜனாதிபதி
செயலகத்தினால் வழங்கப்படும் ஒரு சொட்டு நீரையேனும் அருந்த மாட்டேன். அதிலும் அவர்கள் விஷம் கலந்திருப்பார்களோ என்று சந்தேகம். என்னைக் கொல்ல முடியுமென்றால் கொல்வார்கள்” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரின் கோரிக்கைக்கு அமையவே சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக ESPNcricinfo இணையதளம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலக் குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால், எதிர்வரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவை அர்ஜுன ரணதுங்கவுக்கு வழங்கப்படும்.
அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.