சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட்டுக்கு விதித்துள்ள தடையால் இலங்கை கிரிக்கெட்டுக்கு பாரிய நிதி இழப்பு
ஏற்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
"அரசியல்வாதி ஒருவரால்தான் நாட்டில் கிரிக்கெட் இல்லாமல் போகப் போகிறது. ஒரு தனி மனிதன் பொய் சொல்கிறான். மற்றவர்கள் என்ன என்று பார்க்காமல் ஆம் போடுகிறார்கள். இலங்கைக்கான தடையை ஐசிசி நீக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 50 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை." என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும், இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியறிமைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலையீடே காரணம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று (11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பிரதான காரணம் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு ஆகும்.
“அவரே இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்தார்.
“நாங்கள் தெரிவு செய்த பட்டியலில் இருந்து துஷ்மந்த சமீரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் இறுதி வீரர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு அவர் புதிய பெயர் பட்டியலை தயார் செய்தார்.
“இவரின் தலையீட்டால் பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுவும் இலங்கை அணி தோல்விக்கு ஒரு காரணம். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த தீர்மானம் எமக்கு கவலையை தருகிறது.
“இது குறித்து கலந்துரையாட எதிர்வரும் 21ஆம் திகதி நான் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு செல்லவுள்ளேன். அந்தக் கலந்துரையாடலின் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” என்றார்.