2024 முற்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுகின்றது
என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டுவரை இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதால் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் ஏற்படும் அரசியல் ரீதியிலான தாக்கங்கள் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில்கொண்டே, அவசர நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரியவருகின்றது.
அதேவேளை, முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை வரவேற்போம். அந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.