இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அத்தகைய சந்தேகத்துக்கு உள்ளாகும் நபர்கள் மீது
குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது எனவும், இதுபோன்ற பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்துக்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு ரோமுக்கு வருகைதந்த கொழும்பு பேராயர், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் இலங்கை அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், நாட்டின் நிலைமையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மக்களிடையே அமைதியற்ற சூழலையும் அதிருப்தியையும் உருவாக்கும் நோக்கத்தில் கடுமையான சமூகக் கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் பேராயர் கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்கவும் சாதாரண நிலைமைகளை நடைமுறைப்படுத்தவும் கடுமையான இடையூறுகளை அனுபவித்து வருவதாகக் தெரிவித்துள்ள கர்தினால், பாதிக்கப்படும் கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் வாழும் மக்களையும் நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ளார்.