2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்
நிதியமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு - செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி நேற்றுக் காலை கலந்துகொண்டார்.
நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதி யுமான ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் ஆற்றப்படவிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவு திட்டமாகும் இது.
இம்முறை வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் அரசாங்கத்துக்கு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வரி அதிகரிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரவு - செலவுத்திட்ட விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாள்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாள்கள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்ததே.