நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மீது நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால்
சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்ட பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 பேர் இணைந்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிமொன்றைக் கையளித்துள்ளனர்.
நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ், மேற்படி எம்.பிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு, அந்தக் கடிதத்தின் ஊடாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் அல்லது சபை அமர்வில் அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துதல் அல்லது எதிர்ப்பு தெரிவித்தல் இல்லாவிடின், அவரது செயற்பாடுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ இடையூறு விளைவித்தல் போன்றன, நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் ஊடாகவோ தண்டனை வழங்க முடியுமென்றும், ஆளுங்கட்சி எம்.பிக்கள் தமது கடிதத்தின் ஊடாக சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.