பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல்
கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
"பரதக்கலை" சம்மந்தமாக இஸ்லாமிய மௌலவி ஒருவரின் சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், கையில் பதாகையுடன் எதிர்ப்பு கோசங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். அதனை தெய்வீக கலையாக நாங்கள் கடந்துவரும் நிலையில் அதனை கீழ்த்தரமான கலையாக விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மௌலவிக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் ஆசிரியர்கள் நடனமாடியமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட மௌலவி அப்துல் ஹமீட், பரதநாட்டியம் தொடர்பாகவும் தமிழ் மக்களது கலை மரபு தொடர்பாகவும் அவதூறாக பேசியுள்ளதுடன், ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குறித்த மௌலவிக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் மெளலவிக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த மௌலவியின் கருத்து சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்டபில் நடவடிக்கை எடுக்குமாறும் பௌத்த இந்து சங்கத்தின் தலைவர் ம.மயூரதனால் இன்று வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.