நேற்று இரவு வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சிங்கள மொழிமூலமான சித்தி புள்ளிகளில் கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி உட்பட சில மாவட்டங்களுக்கான புள்ளிகள் 154ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழ் மொழிமூலம் கொழும்பு உட்பட சில மாவட்டங்களுக்கு 147 மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 145 என்ற ரீதியில் புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) வெளியாகின.
இந்த பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையிலேயே, தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்காக 33,7591 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.