இலங்கைக் கிரிக்கெட் அணியில் உள்ளடங்கும் வீரர்களுடனான விசேட சந்திப்பொன்று, நேற்றைய தினம் கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அதிகாரிகள் மற்றும் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, இலங்கைக் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் இலங்கைக் கிரிக்கெட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் தொடர்பில், வீரர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, விளையாட்டு தொடர்பான குற்றங்கள் தடுப்பு சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு, இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருந்தன.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முயன்றதாகவும், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதற்காக சிலர் பெரும் தொகையை முதலீடு செய்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரமோத்ய விக்ரமசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, மேட்ச் பிக்சிங், ஊழல், சட்டவிரோத அறிவுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத பந்தயம் தொடர்பான விடயங்கள் குறித்து தனக்கு தெரியும் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பாரதூரமானது என விளையாட்டு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அந்த அறிக்கை தொடர்பில் முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.