எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ள 2023 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டிக்கு இரண்டு
நாட்களுக்குப் பின்னர், அதாவது எதிர்வரும் 21ஆம் திகதி ஐசிசியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விடயங்கள் குறித்தும் கிரிக்இன்ஃபோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை கிரிக்கெட்டின் இடைநிறுத்தம், ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் மற்றும் ஐ.சி.சி முழு அங்கத்துவ நாடுகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2028ஆம் ஆண்டு லொஸ்ஏஞ்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வாரம் விதிக்கப்பட்ட தடை விவகாரம் ஐசிசி கூட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இலங்கை தொடர்ந்து நடத்துமா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமித்தார். அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களை புறந்தள்ளி அனைவரும் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.