முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகி
தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வுப் பணி தொடர்பாகத் தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
“அகழ்வுப் பணி இன்று காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருக்கின்றது. புதைகுழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகை மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது.
“இம்முறை அகழ்வுப் பணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியைப் பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்துப் பார்க்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் எவ்வளவு தூரத்துக்கு அந்தப் புதைகுழி உள்ளது என அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
“நீதிமன்றத்தின் கூற்றுப்படி 25 இலட்சம் ரூபா வரையிலான நிதி இருக்கின்றது. அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ளப் போதுமானதாக இருக்கும்” என்றார்.